9.7.12

பிரண்டை


வேறு பெயர் : வச்சிரவல்லி
தாவரவியற் பெயர்: Vitis quadrangularis
ஆங்கிலப் பெயர் : Bone selter
இது இலங்கை, இந்தியா முதலிய இடங்களின் வெப்ப பாகங்களில் ஏராளமாய் உண்டாகிற
கொடியினம். இதில் ஓலைப் பிரண்டை, உருட்டைப் பிரண்டை, முப்பிரண்டை, சதுரப் பிரண்டை, களிப் பிரண்டை, தீம் பிரண்டை, புளிப் பிரண்டை எனச் சில பிரிவுகள் உண்டு. முப் பிரண்டை கிடைப்பது அரிது. இதன் தண்டு, வேர் மருத்துவத்தில் பயன்படுகின்றன. இதனால் எருவாய் தினவு (சொறி) குருதி மூலம் ஒழியும் மேலும் குடற்புண், குருதிக் கழிச்சல், மந்தம் கைகால் ஓய்ச்சல் ஆகியவைகள் நீங்கும் பசி உண்டாகும். சதை பிரண்டாலும் சரி செய்து விடும் பிரண்டை என்பது மருத்துவ பழமொழி. இதன் மருத்துவ உபயோகங்களாவன;
மூல நோய்க்கு
பிரண்டை,மருள்கிழங்கு, காட்டுக் கருணை, கறிக்கருணை இவற்றை வகைக்கு 200 கி. அளவு எடுத்து வெய்யிலில் உலர்த்தி காயவைத்து இடித்து சலித்து சூரணமாக்கி  கொண்டு வேளைக்கு 1/2 தே.க வீதம் ஒரு நாளைக்கு காலை மாலை என இரு வேளையாக 48 நாட்கள் தேனில் குழைத்து உண்டு வர குணமாகும். சுக்கு, பிரண்டை, நீர்முள்ளிவேர், மிளகு, வெள்ளைப் பூண்டு, கடுக்காய்த் தோல், சதுரக்கள்ளி வேர் இவற்றை வகைக்கு 5 கி. அளவு எடுத்து அம்மியில் வைத்து மைபோல அரைத்து அதை இரண்டு சம பாகமாக்கி காலை, மாலை இரு வேளைகளிலும் 100 மி.லீ. மோரில் கலந்து  தொடர்ந்து குடித்துவரை உள் மூலம் குணமாகும்.
பிரண்டைவேர், ஆரை வேர், தூதுவளைவேர், மருட்கிழங்கு கருணைக்  கிழங்கு, காட்டுக் கருணை, மிளகரணை வேர், அறுகன்வேர், நீர்முள்ளிவேர் இவைகளை உலர்த்தி சம எடையாக கூட்டிப் பொடித்து வஸ்திரகாயஞ் செய்து 1/2 தே.க காலை, மாலை சாப்பிட மூலநோய் தணியும் வச்சிர வல்லிக் குழம்பு.

பிரண்டை தண்டை துவைத்து ஒரு படி மோரில் கலக்கிப் பிழிந்து சுண்டை வேர், மிளகு, ஓமம், சுக்கு, உள்ளி, கடுகு வகைக்கு 2.5 கி அரைத்துக் கலக்கிக் காய்ச்சிக் குழம்பாக்கி எடுத்து வைத்து 3 நாட்கள் கொடுக்கவும்.
இரத்த மூலத்திற்குச் சித்திர மூலாதிக் கற்கம் கொடிவேலி வேர், ஓமம் ,சுக்கு, இந்துப்பு, பெருங்காயம் வகைக்கு 5 கி அளவெடுத்து ஒரு அம்மியின் மேல் வைத்து பிரண்டைச்சாறு விட்டு நன்றாக அரைத்து இந்த விழுதை எருமைத் தயிருடன் குழப்பி உட்கொள்ள இரத்த மூலம்  தணிவடையும்.
பிரண்டையை நெய்விட்டு வறுத்து அரைத்து கொட்டைப் பாக்களவு பிரமாணம் 8 நாட்கள் அந்தி, சந்தி சாப்பிட்டுவர இரத்த மூலம் ஒழியும்.

உடல் எடை குறைய

பிரண்டை அதன் கூர்முனையை வெட்டி எடுத்து விட்டு அதன் உள்சதையை சிறு சிறு துண்டுகளாக வெட்டி சட்டியில் போட்டு எண்ணெய் ஊற்றி மிளகு, பெருங்காயம், உப்பு, சுக்கு, தக்காளி, இஞ்சி, சீரகம், சோம்பு, ஓமம், வெங்காயம் இவைகளை கையளவு சேர்த்து நன்றாக வதக்கி அதை எடுத்து அம்மியில் வைத்து நன்றாக அரைத்து உருண்டை செய்து சுடு சோற்றில் போட்டு பிசைந்து சாப்பிடலாம்.

குடற் புண்ணுக்கு இஞ்சி பிரண்டை லேகியம்

இஞ்சியைத் தோல் நீக்கி சிறு சிறு துண்டுகளாக வெட்டி நெய் விட்டு வதக்கிப் பொடித்து 600 கி. பிராண்டையை மோரிலிட்டு உப்புக் கூட்டி வற்றலாக்கி இடித்த பொடி 300 கி, கொத்தமல்லி, சீரகம், சிறுதேக்கு, சிற்றரத்தை, சோம்பு, குரோசாணி,ஓமம், திப்பிலி, மிளகு இவை வகைக்கு 30 கி (பொடி பண்ணியது) பனங்கற்கண்டு 1400 கி எலுமிச்சம்பழச்சாறு 1.3 லீற் புளித்த காடி 650 மி.லீ, கொடி நாரத்தம் பழச்சாறு 650 மி.லீ.  இவைகளைக் கூட்டி கரைத்து வடிகட்டிக் காய்ச்சி பாகு பதத்தில் மேற்படி பொடிகளைத் தூவி இலேகிய பதத்தில் எடுத்துக் கொள்ளவும்.
அளவு: புன்னைக்காயளவு காலை, மாலை கொடுக்க குன்மம் எனும் குடற்புண்ணும் வாந்தியும் போம்.

உடல் வன்மைக்கு

இளந்தண்டை இலையுடன் உலர்த்திப் பொடித்து 1/2 தே.க. காலை,மாலை பாலுடன் கலந்து சிறிது கற்கண்டு சேர்த்து அருந்த உடலைத் தேற்றி வன்மையைக் கொடுக்கும்.
அடிபட்டதனால் ஏற்பட்ட வீக்கம்

பிரண்டையை இடித்துச் சாறு பிழிந்து உப்பும், புளியும் சேர்த்து குழம்பு பதமாக காய்ச்சி பொறுக்கும் சூட்டுடன் பூசினால் ஆச்சரியப்படும் விதத்தில் பூரண குணம் கிடைக்கும். மற்றும் கட்டிகளினால் தோன்றிய வீக்கம் மற்றும் எல்லாவிதமான வீக்கத்திற்கும் சிறந்த நிவாரணி.
குழந்தைகளின் மார்புச் சளிக்கு பிரண்டைத் தேன்

பிரண்டையை நெருப்பில் வாட்டி அதிலிருந்து எடுத்த சாற்றில் 1 தே.க. அளவு எடுத்து அதில் 1 தே.க. தேன் கலந்து ஒரு நாளைக்கு 2 வேளை  தொடர்ந்து கொடுத்து வர குணமாகும்.
நிணக்கழிச்சலுக்கு

பச்சைப் பிரண்டை, கொத்தமல்லிக்கீரை , கறிவேப்பிலை, வெந்தயக்கீரை இவை சம எடை கொண்டு இடித்துப் பிழிந்த சாற்றில் 40 மி.லீ. எருமை மோர் 40 மி.லீ. கூட்டிக் கலக்கி இதில் 40 மி.லீ. எடுத்துப் பொடித்த பெருங்காயம் 1 சிட்டிகை சேர்த்துக் காலை, மாலை கொடுக்க குணமாகும்.
(நன்றி-TK) G.JK MEDIA WORKS NEWS TEAM 2012

Ingen kommentarer:

Legg inn en kommentar