5.8.12

ஆண்களை அச்சுறுத்தும் பிரச்னை!




















பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய் மாதிரி ஆண்களுக்கு பிராஸ்ட்டேட் புற்றுநோய்! ‘‘சிவப்பு மாமிசம், தக்காளி, தர்பூசணி ஆகிய உணவுகளை உட்கொள்வதைத் தவிர்க்கிற ஆண்களுக்கு பிராஸ்ட்டேட் சுரப்பு புற்றுநோய் தாக்கும் அபாயம் குறைவு’’ என எச்சரிக்கிறார் சிறுநீரக அறுவை சிகிச்சை நிபுணர்என்.ஆனந்தன். பிராஸ்ட்டேட் சுரப்பி என்றால் என்ன? அதில் உண்டாகக் கூடிய பிரச்னைகள் என்ன? தீர்வுகள், சிகிச்சைகள் என எல்லாவற்றையும் பற்றி விரிவாகப் பேசுகிறார் அவர்.


‘‘பிராஸ்ட்டேட் சுரப்பி என்பது, சிறுநீர் பைக்குக் கீழே, மலம் செல்லும் பாதைக்கு சற்று முன்னால் இருக்கக்கூடிய ஒரு சுரப்பி. இதன் வழியேதான்
சிறுநீரானது வெளியேறும். ஆண்களின் உடலில் மிக முக்கிய உறுப்பான இதில் 50 வயதுக்குப் பிறகு பரவலான பிரச்னைகள் ஆரம்பிக்கின்றன. சிறுநீர் பாதையில் அடைப்பு, சிறுநீர் கழிப்பதில் சிரமம், சிறுநீர் பையில் எரிச்சல் போன்ற பிரச்னைகளுடன், அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டிய உணர்வு, அவசரமாகக் கழிக்க வேண்டிய உணர்வு, சிறுநீர் கழிக்கத் தொடங்கும்போது தாமதம் உண்டாவது, முழுக்க வெளியேற்றாத உணர்வு போன்ற அறிகுறிகளும் இருக்கலாம். இதற்குச் சரியான நேரத்தில் சிகிச்சை எடுக்காதவர்களுக்கு,  அடிக்கடி சிறுநீரகத் தொற்றும், சிறுநீர் பையில் கல் உருவாவதும், சிறுநீர் வெளியேறாமல் அடைப்பு உண்டாவதும், கடைசியாக சிறுநீரகமே பழுதடைவதும் நேரலாம்.

மேலே சொன்ன அறிகுறிகள் இருந்தால் உடனடி மருத்துவப் பரிசோதனை அவசியம். முதல் வேலையாக ரத்த அழுத்தம், நீரிழிவு, கொலஸ்ட்ரால், இதய நோய் போன்றவை உள்ளனவா எனப் பார்த்துவிட்டு, மற்ற சோதனைகளைத் தொடங்க வேண்டும். சிறுநீர் பையில் சிறுநீர் மிச்சமிருக்கிறதா, பிராஸ்ட்டேட் சுரப்பியில் ஏதேனும் கட்டிகளோ, வீக்கமோ இருக்கின்றனவா, அதன் அமைப்பு மாறியிருக்கிறதா, சிறுநீரகம் சரியாக இயங்குகிறதா, பிராஸ்ட்டேட் சுரப்பியின் அளவு எப்படியிருக்கிறது, சிறுநீரகத்தில் வீக்கமிருக்கிறதா என்கிற எல்லாவற்றையும் சோதிக்க வேண்டும். அபூர்வமாக சிலருக்கு பிராஸ்ட்டேட் சுரப்பியில் புற்றுநோய் வரலாம். இதை எளிய ரத்தப்பரிசோதனையின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

பிரத்யேகக் கருவியின் மூலம் சிறுநீர் கழிக்கிற வேகம், அதற்கான நேரம், அளவு ஆகியவற்றைக்  கண்டறியலாம். பிரச்னைகள் இருப்பது உறுதி செய்யப்பட்டால், உடனடியாக சிகிச்சையைத் தொடங்க வேண்டும்’’ என்கிற டாக்டர் ஆனந்தன், சிகிச்சைகளைப் பற்றியும் பட்டியலிடுகிறார்.
‘‘பாதிக்கப்பட்டவர்கள் எப்போது, எவ்வளவு தண்ணீர் குடிக்கலாம் என்கிற ஆலோசனையுடன் தொடங்கும் சிகிச்சை. 70 சதவிகிதத்தினருக்கு மாத்திரைகளின் மூலமே குணப்படுத்தலாம்.


அது பலனளிக்காதவர்களுக்கு அறுவை சிகிச்சை தேவைப்படும். என்டோஸ்கோப்பி மூலம் கத்தியின்றி, வடுவின்றி செய்யலாம். இதயக் கோளாறு உள்ளவர்கள், ஆஸ்பிரின் மாத்திரைகள் எடுத்துக் கொள்வோர் ஆகியோருக்கு லேசர் மூலமும் இந்த அறுவையை செய்யலாம். 50 பிளஸ் வயதுள்ள ஆண்கள், வருடம் ஒரு முறை மாஸ்டர் ஹெல்த் செக்கப்பில், இந்த பிராஸ்ட்டேட் சுரப்பிகளுக்கான சோதனையையும் சேர்த்துச் செய்வது பல ஆபத்துகளில் இருந்து காப்பாற்றும்’’ என்கிறார் அவர்.
(நன்றி-DK) G.JKMEDIAWORKS 2012

1 kommentar:

  1. இப்ப என்ன இதெல்லாம் சாப்பிடலாம்கிறீங்களா இல்லை சாப்பிடக்கூடாதுங்கிறீங்களா? கன்ஃப்யூஸ் பண்றீங்களே? whether we can eat these or not what you are saying...you are confusing....

    SvarSlett